அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை : மத்திய அரசுப்பணியாளர் தேர்வுக்காக பயிற்சி அளிக்க புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடித்தை முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் என அனைத்துப் பிரிவு மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு சார்பில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் ஆகியன இந்த பயிற்சி மையத்தில் அளிக்கப்படுகிறது.
ரூ. 2 ஆயிரமாக உயர்வு
பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உணவுக் கட்டணத் தொகை மாதத்துக்கு ரூ.800-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொகையை ஒவ்வோர் ஆண்டும் ஐந்து சதவீதம் உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பயிற்சி மையத்தின் முதன்மைத் தேர்வு பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மூன்று மாதங்களுக்கும், புது தில்லி மத்திய தேர்வாணையக் குழு நடத்தும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் பயணத் தொகையும் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு பயிற்சிகளை அளித்து சிறந்த முறையில் மாணவர்களை இந்திய குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயார்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 68 மாணவர்களில் 47 மாணவர்கள் அரசுப் பயிற்சி மையத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.10.14 கோடியில் புதிய கட்டிடம்
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்துக்கென அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில் 76 தங்கும் அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அறைகள், குளிர் சாதன வசதியுடன் கூடிய வகுப்பறைகள், நூலகம், கம்ப்யூட்டர் அறை, கருத்தரங்கக் கூடம், உணவுக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.10.14 கோடியில் நவீன வசதிகளுடன் இந்தப் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது.
300 பேர் படிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 21 - 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவில் 21 - 35 வயது வரையிலும் இங்கு சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அரசுப் பயிற்சி மையத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அரசு இணையதளம் மற்றும் சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். நிறுவனத்தில் சேரும்போது, பட்டச் சான்று, ஜாதிச் சான்று, வருமானம், இருப்பிடச் சான்றுகள், மூன்று புகைப்படங்களை அளிக்க வேண்டும்.
பயிற்சி மையத்திலேயே தங்குவதற்கு 200 பேருக்கும், மாலையில் மட்டும் வந்து படித்துச் செல்ல 100 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications