கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்: பீதியில் சாலைகளில் குவிந்த பொதுமக்கள்
மங்களூர்: கர்நாடகாவின் குடகு, ஹாசன், உடுப்பி, மங்களூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்த பொதுமக்கள் பீதியில் சாலைகளில் குவிந்தனர். ஆனால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன், குடகு, தட்சினகன்னடா, மங்களூர், உடுப்பி ஆகிய மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 2.30 மணி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நொடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தில் பீதியடைந்த பொதுமக்கள், சாலைகளில் குவிந்தனர்.
வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் அசைந்ததை பார்த்ததாக மக்கள் தெரிவித்தனர். குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, சித்தாபுரா, சுண்டிகொப்பா, பெட்டள்ளி, அரேகாலு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
சிக்மகளூர் டவுன், அனுமந்தப்பா சர்க்கிள் பகுதியிலும் சுமார் 2 வினாடிகள் அதிர்வு ஏற்பட்டது. ஹாசன் மாவட்டத்தில் ஹாசன் டவுன், சக்லேஸ்புரா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், வீடுகளில் இருந்தவர்கள், பீதியில் சாலைகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர்.
அதேபோல கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தட்சினகன்னட மாவட்டம் மங்களூர், புத்தூர், சுள்ளியா ஆகிய இடங்களிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதை, புவியியல் நிபுணர்களும் உறுதி செய்தனர். 3.9 ரிக்டர் அளவு பதிவானதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications