சொத்து குவிப்பு வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி ஆஜர்
விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும், விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் செம்மண் குவாரி மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 6ம் தேதி, பொன்முடி கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அங்கு பொன்முடிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து பொன்முடி திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந் நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி விசாலாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கின் குற்ற நகல் பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு நீதிபதி கயல்விழி வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று பொன்முடி ஆஜராவது குறித்து அறிந்த திமுக தொண்டர்கள் ஏராளமானோர், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications