தான் சொன்ன வார்த்தையை தானே மீறிய 'தளபதி'!

அது என்ன மு.க.ஸ்டாலின் பார்முலா என்பதை யாரும் விளக்க வேண்டியதில்லை. அதுகுறித்து நிறைய செய்திகளை வெளியிட்டாகி விட்டது. இருந்தாலும் ரத்தினச் சுருக்கமாக சொல்வதானால், இளைஞர் அணியினருக்கு, குறிப்பாக பதவிக்கு வருவோருக்கு வயது வரம்பு நிர்ணயித்தல், வாரிசுகளுக்குப் பதவி தருவதில்லை என்பதுதான் ஸ்டாலின் பார்முலாவின் முக்கிய அம்சங்கள்.
இந்த பார்முலாவுக்கு திமுகவில் பெருத்த வரவேற்பு காணப்படுகிறதாம். இதன் அடிப்படையிலேயே திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை நியமித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இதற்காக தமிழகம் முழுவதும் அவர் சுற்றுபப்யணம் செய்து வருகிறார்.
தற்போது இந்த பார்முலாவைத்தான் ஸ்டாலின் மீறியுள்ளார் என்கிறார்கள். இன்று சென்னையில் ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இளைஞர் அணியில், மாநில துணை அமைப்பாளர்களாக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் மகன் சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகரன், அசன் முகமது ஜின்னா, இ.ஜி.சுகவனம் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், இன்னொரு மாநில துணை அமைப்பாளராக செந்தில்குமார் என்பவரை ஸ்டாலின் நியமித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமியின் மகன்தானாம். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி- பெரியசாமி சரண்:
இதற்கிடையே, நில அபகரிப்பு வழக்கில் தூத்துக்குடி திமுக செயலாளர் பெரியசாமி தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி விட்டது. இதையடுத்து இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் பெரியசாமி சரணடைந்தார்.
பெரியசாமி மீது கால்டுவெல் காலனி முகைதீன் பாத்திமா என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் எனக்கு 19 ஏக்கர் 33 செண்ட் நிலம் உள்ளது. அதனை திமுக செயலாளர் பெரியசாமி, அவரது மகன் ஜெகன், மாமனார் டேவிட் உள்பட 13 பேர் சேர்ந்து போலியாக ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன் பேரில், தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி உள்ளிட்டோரைத் தேடி வந்தனர். அவர்கள் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மனு செய்திருந்தனர். மனுவை நீதிபதி மதிவாணன் விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அனைவரின் முன்ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பெரியசாமி இன்று சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications