கிரானைட் விவகாரம்: பிஆர்பி குடும்பத்தினர் உட்பட 8 பேருக்கு பிடிவாரன்ட்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள பி.ஆர்.பி. அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள் உட்பட 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு செய்தது தொடர்பாக இதுவரை 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் பி.ஆர்.பி கிரானைட் அதிபர் பழனிச்சாமி உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பல குவாரி அதிபர்கள், பங்குதாரர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்க கோரி தனிப்படை டி.எஸ்.பி தங்கவேல், மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில்,
பி.ஆர்.பழனிச்சாமியின் மனைவி செல்வி, மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், சகோதரி மகன்கள் தெய்வேந்திரன், முருகன் என்ற முருகேசன், மருமகன் மகாராஜன் ஆகியோர் உள்பட மொத்தம் 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவித்தார்.
அதேபோல பிஆர்பி அதிபர் பழனிச்சாமியின் காவலை நீட்டிக்க கோரி, நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். போலீசாரின் கோரிக்கை ஏற்ற நீதிபதி, வரும் 29ம் தேதி வரை பழனிச்சாமியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications