மதுரை முத்தூட் நிறுவன ரூ. 10 கோடி கொள்ளை: கல்லூரி மாணவர்கள் கைது.. பெண்ணுக்கும் வலை
மதுரை: மதுரை முத்தூட் நிறுவனத்தில் நடந்த ரூ. 10 கோடி நகை கொள்ளை தொடர்பாக 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளையில் ஒரு பெண்ணும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி மேலாளர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் ஒரு மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. அவர்களிடமிருந்த நிறுவன சாவியை பறித்து, முத்தூட் நிறுவனத்தில் அன்றிரவு நுழைந்து, லாக்கரில் இருந்த 37 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பத்தில் போலீசார் மீட்டனர். ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
முதலில் இந்தக் கொள்ளையில் நிதி நிறுவன ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதிய போலீசார் பாலசுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோரிடம் கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தினர். அப்போது வெளியாட்கள் தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
முன்னாள் கல்லூரி மாணவர்களும், ஒரு பெண்ணும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் ஒருவரின் மகனான செல்வின் என்பவரை கைது செய்துள்ளனர்.
இவர் தனது நண்பர்களுடன் ஒருமுறை முத்தூட் நிதி நிறுவனத்திற்கு சென்று நகையை அடகு வைக்க சென்றபோது அங்கு வரும் நகைகளை பார்த்துள்ளார். அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி தனது சக நண்பர்களான கல்லூரி மாணவர்கள் பத்து பேருடன் சேர்ந்து இந்தக் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
நிதி நிறுவன அதிகாரிகளைக் கடத்தி சாவியை பறித்து சென்று, முதலில் லாக்கரின் அலாரத்தை ஆப் செய்துவிட்டு கொள்ளையடித்துள்ளது இந்தக் கும்பல்.
இவர் கொடுத்த தகவலின்படி சூரியானந்த், வெங்கடேஷ், ராஜ்குமார் ஆகிய 3 மாணவர்களும் போலீசில் சிக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து 15 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்கள் 3 பிரிவாக பிரிந்து தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது. இவர்களைப் சென்னை, கொடைக்கானல், பெங்களூர் மற்றும் மதுரை பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications