சென்னையில் சவ ஊர்வலத்தை தடுத்ததால் இரு பிரிவினரிடையே மோதல்-பதற்றம்: போலீஸ் தடியடி
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் சவ ஊர்வலத்தை தடுத்ததால் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
அதிமுக பிரமுகர் சாவு..
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வேலு (55) மரணமடைந்தார். மைலாப்பூர் சுடுகாட்டுக்கு இவரது உடலை அங்குள்ள பி.எம்.தர்கா தெரு வழியாக தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
ஆனால், அந்தத் தெரு வழியாக சவ ஊர்வலம் செல்ல நீதிமன்றத் தடை உத்தரவு இருப்பதாகவும், இதனால் இந்த தெரு வழியாக சவ ஊர்வலம் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், 40 ஆண்டு காலமாக இந்தத் தெரு வழியாகவே சவ ஊர்வலம் செல்கிறோம் என்று கூறி, சவத்துடன் செல்ல முயன்றனர் இன்னொரு பிரிவினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்த போலீசார் அங்கு குவிந்தனர்.
துணை கமிஷனர்கள் புகழேந்தி, பவானீஸ்வரி, சரவணன், உதவி கமிஷனர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. இரு தரப்பினரையும் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
இதில் 3 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். போலீசார் சிலரை விசாரணைக்காக பிடித்துச் சென்றனர்.
அதன் பிறகு வேறு பாதை வழியாக வேலுவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications