கேரளாவில் அனைவருக்கும் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள்-தமிழக அரசும் தருமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் ஆண்டிற்கு 9 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பக்கத்து மாநிலமான தமிழகத்தில் இந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
நாட்டில் ஆண்டுதோறும் மானிய விலையில் 6 கேஸ் சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் கேரளாவில், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு, ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்தாலும், அனைத்து தரப்பினருக்கும் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து நேற்ற நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த முதல்வர் உம்மன் சாண்டி, அனைத்து தரப்பினருக்கும் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
அமைச்சரவை கூட்டத்தில் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசித்தோம். இதில் ஆண்டுதோறும் அனைத்து தரப்பினருக்கும் 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டிற்கு 9 சிலிண்டர்களுக்கு மேல் மானிய விலையில் உறுதியாக வழங்கப்படாது என்றார்.
மத்திய அரசு வழங்கும் 6 சிலிண்டர்களுடன், மீதமுள்ள 3 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்க, மாநில அரசு நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இதன்மூலம் கேரள அரசுக்கு ரூ.120 கோடி நிதிசுமை அதிகரிக்கும்.
தமிழகத்திற்கு எப்போ?
கேரளாவில் அனைத்து தரப்பினருக்கும் ஆண்டிற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் நிலையில், பக்கத்து மாநிலமான தமிழகத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் நலனில் அக்கரை கொண்ட முதல்வர் ஜெயலலிதா, இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவாரா?












Click it and Unblock the Notifications