'எமர்ஜென்சி' காலத்தை போல் மத்திய அரசு செயல்படுகிறது: பாஜக குற்றச்சாட்டு!
சென்னை: இந்திரா காந்தியின் ஆட்சியின் போது அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலத்தை போல் தற்போது மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டி உள்ளார்.
இது குறித்து சேலத்தில் பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
சேது சமுத்திர திட்டத்தை புராதன சின்னமான ராமர் பாலத்தை இடிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதை பாஜக வரவேற்கிறது.
மத்திய அரசு தனது மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது அதை நிறுத்துவிட்டது. மத்திய அரசு, அரசியல் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் நலன் கருதி தமிழகத்திற்கு மின்சாரத்தை வழங்க வேண்டும்.
தமிழக அரசும் மத்திய அரசை நம்பி இருக்காமல் மின் உற்பத்தியை ஏற்படுத்த புதிய மின் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனே மின்சார உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் இடையே நடந்த நில பரிமாற்றம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட அதிகாரியை, ஹரியானா அரசு மாற்றி உள்ளது.
இந்திரா காந்தியின் ஆட்சியின் போது எமர்ஜென்சி காலத்தில் நடந்தது போல், தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மீண்டும் அந்த அதிகாரியை அதே துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? என்றார்.












Click it and Unblock the Notifications