தியாகியை காக்க வைத்த கலெக்டர்: தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்
சென்னை : பென்சன் கேட்டு கலெக்டரைப் பார்க்க சென்ற சுதந்திரப் போராட்ட தியாகியை காக்க வைத்த கலெக்டரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ராயப்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியப்பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
90 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி ஆர்.எம்.எல்.பழனியப்பன் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி 6 மாதங்கள் சிறை சென்றவர். அவர் கடந்த 11-ந் தேதி தனது ஓய்வூதியம் தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டரைப் பார்ப்பதற்காக சென்றிருந்தார்.
காத்திருக்க வைத்த கலெக்டர்
ஆனால் அவரை அழைத்து குறையைக் கேளாமல், கலெக்டரின் அறைக்கு வெளியே 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வைக்கப்பட்டார். இந்த அவமதிப்பு தொடர்பாக கலெக்டருக்கு நான் 11-ந் தேதி மனு கொடுத்து, நாட்டுக்காக போராடிய தியாகியின் காயப்பட்ட உணர்வுகளை ஆற்றுவதற்காக, அவர் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அப்படி இருந்தும் கலெக்டர் அனுமதி மறுத்து விட்டார்.
வயதானவர்களுக்கு மரியாதை அளிப்பது நமது கலாசாரம். அவரைப் போன்றவர்களின் தியாகத்தால்தான் நாம் தற்போது தொழிலாற்றி வருகிறோம். எனவே, கலெக்டர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் 13-ந் தேதி புகார் மனு கொடுத்தேன். ஆனால், தலைமைச் செயலாளரும் தனது கடமையை செய்யவில்லை. எனவே, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கு விசாரணையை அக்டோபர் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது தலைமைச் செயலாளர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications