பாஜகவிடமிருந்து பிரிகிறார் வசுந்தரா ராஜே சிந்தியா!

மகாராஷ்டிராவில் நிதின் கத்காரியால் தலைவலி, கர்நாடகத்தில் எதியூரப்பாவால் திருகுவலி என பாஜக தலைமை கடும் கஷ்டத்தில் இருந்து வரும் நிலையில் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவால் புதிய சிக்கலை சந்திக்கப் போகிறது பாஜக.
ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தவர் வசுந்தரா. ராஜஸ்தான் மாநில பாஜகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் தலையெடுக்க, அதை பாஜக தலைமை ஆதரிக்க கட்சிக்குள்ளேயே ஓரம் கட்டப்பட்டு விட்டார் வசுந்தரா.
விரைவில் அவர் பாஜகவை விட்டு விலகி தனியாக ஒரு கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக வசுந்தரா இருக்கிறார். அவருக்கென்று எம்.எல்.ஏக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதால், அவர் பாஜகவை விட்டு விலகினால் அது ராஜஸ்தான் பாஜகவுக்கு ராயல் சரிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில கட்சி நிர்வாகத்தில் தன்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் பாஜக தலைமை தடுத்து வருவதாக புலம்பிக் கொண்டிருக்கிறார் வசுந்தரா. மாநிலத் தலைவர் நியமனத்தில் கூட தனது கருத்து கேட்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் வரவுள்ளன நிலையில் வசுந்தராவின் இந்த விசனம் கட்சிக்கு பெரிய பின்னடைவைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை வசுந்தரா தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ராஜஸ்தானில் பாஜக பெரும் பின்னடைவில்தான் உள்ளது. மக்கள் செல்வாக்குடைய தலைவரின் கீழ் அந்த மாநில பாஜக தற்போது இல்லை. வசுந்ததராவையும் ஓரம் கட்டி விட்டதால் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். கட்சிக்குள் ஒரு ஒழுங்கு கிடையாது.
இந்த நிலையில்தான் வசுந்தராவும், அவரது ஆதரவாளர்களும் கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி காணும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை அரசியல் ஸ்டண்ட் என்றும் கூறுகிறார்கள். சட்டசபைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு அதிக சீட் வாங்க வேண்டும் என்பதற்காக வசுந்தரா தரப்பு வேண்டும் என்றே இப்படி செய்தியைப் பரப்பி வருவதாக வசுந்தராவின் எதிர்ப்பாளர்கள் முணகுகிறார்கள்.












Click it and Unblock the Notifications