போலீஸ் சங்கம் அமைக்க முயன்ற நெல்லை ஏட்டு 'டிஸ்மிஸ்'
நெல்லை: நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்பாடாமல், போலீஸ் சங்கம் அமைக்க முயன்ற ஏட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை சிறுவர் பாதுகாப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் சங்கரசுப்பிரமணியன். வள்ளியூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்களிடம் இருந்து நகை பறித்த விவகாரம், போலீஸ் அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் இருந்தது, இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதன்பிறகு நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் வேலையில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏட்டு சங்கரசுப்பிரமணியன் போலீஸ் சங்கம் அமைக்க போலீசாரை தூண்டியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது. இதில் முன்னீர் பள்ளம் அருகேயுள்ள மேலதிடியூரில் முப்புடாதி அம்பாள், போலீஸ்காரர் பெருமாள் ஆகியோர் இடையேயான சிவில் பிரச்சனையில் தலையிட்டு இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகவும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றசாட்டுகளை கூறியதாகவும், சங்கம் அமைக்க போலீசாரை தூண்டியது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து சங்கரசுப்பிரமணியனை பணிநீக்கம் செய்து நெல்லை மாநகர துணை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications