அவங்களும் செய்யல... எங்களையும் செய்ய விடல... ரொம்ப மோசம்! - விஜயகாந்தின் 'மழைக் குற்றச்சாட்டு'!
சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழைக்கால நிவாரணப் பணிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை... செய்ய நினைக்கும் தேமுதிகவையும் செய்ய விடாமல் தடுக்கிறது, என்று எதிர்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் குற்றச்சாட்டி உள்ளார்.
வடக்கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே மழைகால நிவாரண பணிகளில் தமிழக அரசு விழிப்புடனும், வேகமாகவும் செயல்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவ மழை தற்போது தான் துவங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை பெருநகர பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கும் இடங்களில் அரைமணி நேரத்தில் தண்ணீர் அகற்றப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.பி.முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் நடைமுறையில் நிலைமை படுமோசமாக உள்ளது. தேங்கிய தண்ணீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கெனவே குண்டும் குழியுமாக இருந்த சாலைகள், மேலும் மோசமாகி பழுதடைந்துள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை. பள்ளி செல்லும் பிள்ளைகளின் அவதி சொல்லிமாளாது. அறுந்து விழும் மின்கம்பிகளில் அகப்பட்டு பலரும் பலியாகி வருகின்றனர்.
எங்கு பார்த்தாலும் மக்கள் இயங்க முடியாமலும், அன்றாட பணிகளில் ஈடுபட முடியாமலும் முடங்கும் சூழ்நிலையில் உள்ளனர். அமைச்சர்கள் அறிக்கை கொடுப்பதோடு சரி, அமைச்சர்களோ, மேயரோ மாநகராட்சி கவுன்சிலர்களோ பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடவில்லை. இதனால் அரசு அதிகாரிகளும் மந்தமாக செயல்படுகின்றனர்.
பொதுமக்கள் ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 45 பேருக்கும் அதிகமானோர் இதுவரை இறந்துள்ளனர். நிர்வாக கோளாறுக்கு இதெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். குடிதண்ணீரும், சாக்கடை நீரும் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காலம் வரும் என்று தெரிந்தும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முடிக்காதது ஏன்?
மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டத்தை நிறைவேற்ற தேமுதிகவினர் மருத்துவமனைகளில் சுத்தம் செய்தல், சாலைகளை செப்பனிடுதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை தமிழகம் முழுவதும் செய்தனர்.
ஆனால் பல இடங்களில் அரசு அதிகாரிகள், தேமுதிகவினரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். மக்களிடம் ஓட்டு வாங்குவதோடு சரி. அதன்பிறகு மக்களை பற்றி அக்கறை காட்டுவது இல்லை. இனியாவது அதிமுக அரசு நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்," என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உறங்கும் தமிழக அரசு: ராமதாஸ்
பருவ மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டும் உறங்கும் தமிழக அரசு, இனியாவது விழித்து கொண்டு துரித மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பருவ மழை துவங்கி கடந்த 3 நாட்களிலேயே இதுவரை வரலாறு காணாத அளவில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பருவ மழைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த 3 நாட்களிலேயே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் காண முடிகிறது.
பல பகுதிகளில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் குழாயுடன் கழிவுநீர் கலந்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் 3 நாட்களுக்கே இப்படி என்றால், இன்னும் பருவ மழை தீவிரமடைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.
சென்னை மாநகரமே வெள்ளக்காடாக ஆகிவிடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து, இதுவரை உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications