புதுப் பாய்ச்சலில் மதுரை ஆதீனம் .. நித்தியானந்தா டிரஸ்ட்டைக் கலைத்தார்!
மதுரை: ரூ. 1000 கோடி மதிப்பிலான மதுரை ஆதீன மட சொத்துக்களைப் பராமரிப்பதற்காக நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை பாதியிலேயே கலைக்கப்பட்டு விட்டது. இதை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளார்.

1000 கோடி சொத்துக்களைக் குறி வைத்த நித்தியானந்தா
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைந்ததுமே அதன் சொத்துக்களை குறி வைத்து நித்தியானந்தா செயல்பட ஆரம்பித்தார். புதிதாக ஒரு அறக்கட்டளையை அவர் உருவாக்கினார். இந்த அறக்கட்டளையே ரூ. 1000 கோடி மதிப்புள்ள ஆதீன சொத்துக்களைப் பராமரிக்கும் என்றும் அறிவித்தார். ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்தே நித்தியானந்தாவை பதவியை விட்டுத் தூக்கினார் அருணகிரிநாதர்.

அதிரடியாக கலைத்த ஆதீனம்
இந்த நிலையில் தற்போது இந்த அறக்கட்டளை கலைக்கப்பட்டு விட்டது. இதை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளார். இதை அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பழைய பெருமை வந்துருச்சுங்க
நித்தியானந்தாவின் நீக்கத்தின் மூலம் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சைவக் குறவர்களால் பெருமை பெற்ற இந்த மடத்தின் கெளரவமும், பெருமையும் மீண்டும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே இனிமேல் இந்த அறக்கட்டளைக்கு வேலை இல்லை.

என்னை நீக்க அவரால் முடியாது
நீங்கள் நித்தியானந்தாவை நீக்கியிருக்காவிட்டால் அவர் உங்களை நீக்கியிருப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது சாத்தியமே இல்லை. ஒரு மூத்த ஆதீனத்தை, இளைய ஆதீனம் பதவி நீக்கம் செய்ய முடியாது என்றார்.

என்னுடையதை திருப்பித் தர வேண்டும் நித்தியானந்தா
நித்தியானந்தா, அவருடைய பொருட்களை எடுத்துசென்றுவிடவேண்டும்; அதேபோல என்னுடைய பொருட்களை கொண்டு வந்து தந்துவிடவேண்டும். இல்லையென்றால் போலீசில் புகார் செய்வேன். இனி நடப்பவை எல்லாம் ஆசிரமத்தில் நல்லனவையாகவே இருக்கும்.

ஏன் தலைமறைவாக இருக்கிறார்...?
நித்தியானந்தா என்னை தொடர்பு கொள்ளவில்லை. நானும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அவரை தொடர்புகொள்ளவும் நான் விரும்பவில்லை. அவர் தலைமறைவாக இருப்பது குறித்து எதுவும் எனக்கு தெரியாது. அவர் ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்பதும் எனக்கு தெரியாது.

அவரை அரசு பார்த்துக்கும்
இனிமேல் நித்தியானந்தாவை அரசு பார்த்துக்கொள்ளும். ஆதீன மடத்தை நான் பார்த்துக்கொள்வேன்.

வாரிசு பற்றி அப்புறம் பார்க்கலாம்
ஆதீன மடத்தின் அடுத்த வாரிசு குறித்து இப்போது எந்த திட்டமும் இல்லை. அது பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம். நித்தியானந்தாவால் நடத்தப்பட்ட 24 மணி நேர அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி ஆன்மீக பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.

3 மணி நேரம் ரகசிய ஆலோசனை
நேற்று மதுரை ஆதீன மடத்திற்கு திருப்பனந்தாள் ஆதீனம் வருகை தந்தார். அவர், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருடன் 3 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

ராம கோபாலனும் வரவேற்பு
நித்தியானந்தாவை விரட்டி விட்டதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மதுரை ஆதீனத்தை, மதச்சார்பற்ற தமிழக அரசு எடுத்துக் கொள்ளலாம் என நினைப்பதாக வதந்திகள் பரவுகின்றன. தமிழக முதல்வர், இந்து மத நடவடிக்கைகளில் தலையிட மாட்டார் என, இந்து முன்னணி நம்புகிறது என்றார்.












Click it and Unblock the Notifications