இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
கோபி: ராகுல் காந்தி பிரதமராக அனைத்து தகுதிகளும் கொண்டவர். எனவே இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரியும், மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை விளக்கியும், கோபி பெரியார் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு கூறியதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினால் தான் நாம் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர முடியும். நெய் வேண்டும் என்றால் வெண்ணெய்யை உருக்கித்தான் ஆக வேண்டும். தமிழகத்தில் மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொழிற்கூடங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று 560 அணுஉலைகள் உள்ளன. அவைகள் எந்த ஆபத்துமின்றி இயங்கி வருகின்றன. சென்னை கல்பாக்கம் எத்தனை புயல், சுனாமிகளை சந்தித்து இயங்கி கொண்டிருக்கிறது. என்ன அபாயம் வந்துவிட்டது. போராட்டக்காரர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த கூடங்குளம் அணுஉலையில் 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித பாதிப்பும் கிடையாது. இந்த திட்டத்தால் தமிழக மக்கள் தான் அதிக அளவு பயன் பெறுவார்கள். இதையும் மீறி உதயகுமார் போன்றவர்கள் போராடினால் முதல்வர் எந்த தயவுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயகுமார் என்ற தனி மனிதன் இன்று அன்னிய நாட்டு உதவியுடன் பணக்கட்டுகளை வீசி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராக பாஜகவினர் கூச்சலிட்டு வருகின்றனர்.
இதில் கருணாநிதி, இரட்டை வேடம் போட்டு வருகிறார். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதித்த விஷயம் தனக்கு தெரியாது என்கிறார். ஆனால் மத்திய அரசு தெளிவாக சொல்லி உள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளளனர்.
குறிப்பாக ஊட்டியில் ரூ.3 விற்கப்படும் உருளைக் கிழங்கு, கோபியில் வந்து சந்தையில் விற்கும் போது ரூ.20 ஆகிறது. இடைத்தரகர்கள் வியாபாரத்தால் விவசாயிக்கு எந்த விதமான லாபமும் இல்லை. விவசாயிகள் பலன் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் இந்த புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி பிரதமராக வர அனைத்து தகுதிகளும் கொண்டவர். எனவே இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.
இலங்கையில் தமிழர்கள் எந்தவித பயமின்றி வாழ மத்திய அரசும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உதவி செய்வார்கள். காங்கிரஸ் கட்சி 2016 வரை மத்தியில் ஆட்சி செய்யும். இடைத்தேர்தல் வராது என்றார்.












Click it and Unblock the Notifications