நகைக் கடை ஊழியரை கொன்று 3 கிலோ நகைகள் கொள்ளை- சிசிடிவி கேமிராவும் அபேஸ்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் நகை மற்றும் அடகுக் கடை ஊழியரைக் கொன்று 3 கிலோ நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மடிப்பாக்கம் சதாசிவம்நகரில் ஸ்ரீ பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடையும் அடகுக் கடையும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதன்சிங் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடை உரிமையாளரான மோகன்லால் நேற்று பிற்பகல் சாப்பிட சென்ற போது மதன்சிங் மட்டும் கடையில் இருந்துள்ளார். மாலை 5.30 மணியளவில் பக்கத்து கடைக்காரர் நகைக் கடையை எட்டிப் பார்த்த போது மதன்சிங் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். இதுபற்றி மோகன்லாலுக்கு தகவல் கொடுக்க அவர் போலீசிடம் புகார் செய்தார்.
சம்பவ இடத்துக்குப் போலீசார் விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மோகன்லாலில் நகைக் கடை மற்றும் அடகுக் கடையில் இருந்த அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. சுமார் 3 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்,
கொள்ளையர்கள் தப்பி செல்லும்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும், அது தொடர்பான உபகரணங்களையும் நகைகளோடு எடுத்துக்கொண்டு போய்விட்டனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications