கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது - கருணாநிதி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது என்பதை உணர்த்தும் ஈத்-உல்-அஸா எனும் நோன்புத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியச் சமுதாய மக்களால் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி மக்களுக்கு நன்மை பயக்கும் வாழ்வியல் நெறிகளைப் போதிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்மீது பகைகொண்டு, அப்போதனைகளைத் தடுக்க முனைந்தவர்கள் அவருக்கு அளவிடமுடியாக் கொடுமைகள் புரிந்தனர்; அவரைக் கல்லால் அடித்துச் சித்திரவதை செய்தனர்.
நபிகள் பெருமானாரின் வளர்ப்புத் தந்தையாகிய அபூதாலீப்பை அணுகி, உங்கள் தம்பி மகனுக்குப் பொன்னைக் குவியல் குவியலாகக் கொட்டிக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறோம்; உலகிலேயே சிறந்த பேரழகியைத் திருமணம் செய்து வைக்கிறோம்; விருப்பப்பட்டால் அரபு நாட்டின் மன்னராகவே அவரைப் பிரகடனம் செய்கிறோம்; இவ்வளவிற்கும் ஈடாக, உங்கள் தம்பி மகன் செய்துவரும் போதனைகளை விட்டுவிட வேண்டும்; இல்லையேல், நாங்கள் அவரைப் பழிவாங்கியே தீருவோம் என்றனர்.
நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அபூதாலீப் நபிகள் பெருமானாரை அழைத்துப் பகைவர்கள் கூறியதைத் தெரிவித்தபோது, என் வலது கரத்திலே சூரியனையும், இடது கரத்திலே சந்திரனையும் அவர்கள் கொண்டுவந்து தருவதானாலும் என்னுடைய சத்தியப் பிரச்சாரத்தை ஒருக்காலமும் நிறுத்த மாட்டேன். இந்தச் சத்தியப் பிரச்சாரத்தில் நான் வெற்றி பெறுவேன். இல்லையானால் அதிலேயே மகிழ்ச்சியோடு மாண்டு போவேன் என்று நபிகளார் உறுதிபடத் தெரிவித்தார்.
அன்று நபிகள் நாயகம் கொண்ட மன உறுதி பகைவரின் ஆணவத்தை அழித்து, அவரை மதித்துப் போற்றி வணங்கிட வழிவகுத்தது. அத்தகைய அண்ணலார் நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி, நாள்தோறும் கடமைகளாற்றி வாழும் எனதருமை இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நன்மைகள் எல்லாம் செழித்திட என் உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications