சட்டசபை வைர விழா: குடியரசு தலைவரிடம் நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்
சென்னை: தமிழக சட்டசபையின் வைர விழாவில் பங்கேற்க வரும்படி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுப்பதற்காக, தமிழக அமைச்சர்கள் இன்று காலை டெல்லிக்கு சென்றனர். அங்கு விழா அழைப்பிதழை குடியரசு தலைவரிடம் அளித்து அழைப்பு விடுத்தனர்.
தமிழக சட்டசபை கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதை பிரம்மாண்டமான முறையில் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக வரும் 29ம் தேதி வைர விழா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் அவ்விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் வகையில் பின்னர் அதை, அடுத்த மாதம் (நவம்பர்) 30ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையின் வைரவிழாவில் கலந்து கொள்ளுமாறு, குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்க தமிழக சபாநாயகர் தனபால், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தம்பித்துரை எம்.பி. ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்த தமிழக அமைச்சர்கள், வைர விழாவிற்கான அழைப்பிதழை அளித்து விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். எனவே தமிழக சட்டசபை வைரவிழாவில் குடியரசு தலைவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தபடியாக அவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் மின்சாரம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாக, தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications