நாடார் குல மக்களுக்கு தமிழகமே நன்றிக்கடன் பட்டுள்ளது - வைகோ

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை மலையாள தேசத்தோடு கபளீகரம் செய்ய கேரளத்தினர் வஞ்சகமாக சதி செய்தனர். அந்த சதி வலையை அறுத்து எறிந்து தாய்த்தமிழகத்துடன் குமரி மாவட்டத்தை இணைக்க, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸை அமைத்து பெருமை பெற்ற மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியேர், பி.எஸ்.மணி, சிதம்பரநாத நாடார், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, ராமர்சுப்பையர் உள்ளிட்ட பெருமக்களும், குமரி மாவட்ட மக்களும் இடைவிடாத அறப்போர் நடத்தினர். தொடக்கத்தில் 4 உயிர்களையும், பின்னர் புதுக்கடையில் 11 தமிழர் உயிர்களையும் துப்பாக்கிச் சூட்டில் பலிகொடுத்தனர்.
மார்சல் நேசமணி தேவிகுளம், பீர்மேட்டை மீட்கவும் போராடியதோடு இந்திய நாடாளுமன்றத்தில் தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டிற்கே சொந்தம் என வீரமுழக்கம் இட்டார்கள். குமரி மாவட்டத்தை தாய்த் தமிழகத்தோடு இணைத்ததற்காக, குமரி மாவட்ட மக்களுக்கு, நாடார் குல மக்களுக்கு தமிழகமே நன்றிக்கடன் பட்டுள்ளது.
நாடார் குல பெருமக்கள் அம்மண்ணின் பூர்வ குடிமக்கள் ஆவார்கள். தென்மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போய் குடியேறியவர்கள் இந்த நாடார் குல பெருமக்கள் என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது அக்கிரமமான பொய்யாகும்.
உலகத்தின் மிகத் தொண்மையான மண், நாஞ்சில் மண்ணாகும். அதங்கோட்டு ஆசானையும், தொல்காப்பியனையும், ஜீவாவையும், கவிமணியையும், கலைவாணரையும் தந்த பூமியாகும். நாடார் குல பெருமக்களை சாதிப்பெயரை இழிவுபடுத்தியும், அக்குலப் பெண்களுக்கு அவமானம் இளைத்தும் கேரளம் நடத்திய கொடுமைகளை எதிர்த்து, ஐயா வைகுண்டர் நாதர் தலைமையில் அறப்போர் நடந்தது.
உண்மை இவ்வாறு இருக்க வரலாற்றை திருத்தியும், உண்மைகளை மறைத்தும், பொய்களை வரைந்தும், மத்திய அரசின் இடைநிலை கல்விவாரியத்தின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் திட்டமிட்டே நஞ்சை கொட்டியிருப்பது மத்திய அரசின் மன்னிக்க முடியாத அடாதசெயலாகும்.
அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த பாபா சாகேப், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களைக் கொச்சைப்படுத்திய கருத்துப்படத்தை பாடத்திட்டத்தில் இதே மத்திய அரசின் இடைநிலை கல்விவாரியம் சேர்த்தது. 1965 இல் தமிழகத்தில் மூண்ட இந்தி எதிர்ப்பு மொழிபுரட்சியினை களங்கப்படுத்தி, பாடத்திட்டத்தில் சேர்த்தது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் தற்போது குமரி மாவட்ட நாடார்குல மக்களையும், தென் தமிழ்நாட்டு வரலாற்றையும் களங்கப்படுத்தும் நோக்கத்தில் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது.
குமரி மாவட்ட மக்கள் குறித்த இந்த பொய்ச் செய்திகளை உடனடியாக பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியும், இப்படிப்பட்ட ஈனச்செயலில் ஈடுபட்ட மத்திய அரசின் இடைநிலை கல்விவாரியத்தைக் கண்டித்தும், நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், நாகர்கோவில் மத்திய அரசின் தலைமை அஞ்சலகம் எதிரே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த அறப்போராட்டத்தில் கழகக் கண்மணிகளும், தமிழக உரிமை உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications