துக்கையாண்டி மனைவியைக் கைது செய்தது போலீஸ்.. பெங்களூரில் சிக்கினார்
சென்னை: நில மோசடி வழக்கில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
சென்னை நீலாங்கரை அருகேயுள்ள பனையூர், உத்தண்டி பகுதிகளில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள 12 கிரவுண்டு நிலத்தை அபகரித்து, அதில் பங்களா கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக முன்னாள் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த நில உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில், சுப்புலட்சுமி, துக்கையாண்டியின் மகள்கள் யாமினி, யுபா மற்றும் உறவுப்பெண் தனலட்சுமி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், துக்கையாண்டி சேர்க்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அவர் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். தினசரி மத்திய குற்றப் பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
துக்கையாண்டியன் மகள்கள் இருவரும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். அவர்களில் யாமினிக்கு மட்டும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. சுப்புலட்சுமியும், தனலட்சுமியும் தலைமறைவாக இருந்தனர். இவர்களுக்கு முன்ஜாமீ்ன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், பெங்களூரில் வைத்து சுப்புலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு சுப்புலட்சுமி கைதானதாக கூறப்படுகிறது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications