பெரம்பலூர் பெருமாள் கோவிலில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள தேர் பாகங்கள் எரிந்து சாம்பல்
பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில், கோவில் தேர் பாகங்கள் உட்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து காரணமாக நேற்று கோவிலில் திருமணம் செய்ய வந்திருந்த ஜோடிகளும், அவர்களின் உறவினர்களும் ஓட்டம் பிடித்தனர்.
பெரம்பலூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் அருகே, கடந்த 8ம் நூற்றாண்டு கட்டப்பட்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
கோவில் மூலவர் விமான திருப்பணிக்காக நேற்று காலை பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால், 6 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் உறவினர்களும், நண்பர்களும், மற்ற பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் ஏகாதசி மண்டபத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அப்பகுதியில் பயங்கர ஜூவாலையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ராஜகோபுர நுழைவு வாயிலின் வலது பகுதியில் இருந்த ஏகாதசி மண்டபவத்தில் கோவில் தேரின் பழைய சக்கரம் மற்றும் உதிரிபாகங்கள், மரக்கட்டைகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஏகாதசி மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், இவை அனைத்து எரிந்து நாசமானது.
கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை அறிந்த திருமண ஜோடிகள், கோவிலை விட்டு வெளியே ஓடினர். ஆனால் தைரியமான சில ஜோடிகள் கோவிலில் இருந்தவாறு தாலியை கட்டிவிட்டு, ஓட்டம் பிடித்தனர். மேலும் கோவிலில் இருந்த பக்தர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள், கோவிலுக்கு வந்த தீயை அணைக்க போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மேலும் ஏகாதசி மண்டபத்தின் தென்மேற்கு சுவர் இடிந்து விழுந்தது. இதில் ரூ.20 மதிப்பிலான ஏகாதசி மண்டபம் சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் கோதண்டராமன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணத்திற்கு வந்த நபர்களில் ஒருவர், சிகரெட் பிடித்து விட்டு அதை அணைக்காமல் ஏகாதசி மண்டபவத்தில் போட்டு சென்றதால், தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications