கொலை முயற்சி வழக்கு ... கைதிலிருந்து தப்ப முன்ஜாமீன் கோருகிறார் விஜயகாந்த்

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் விஜயகாந்த்தை அணுகி அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வருவது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு சரியாக பதிலளிக்காத விஜயகாந்த் ஆத்திரமடைந்து, கோபத்துடன் ஜெயா டிவி செய்தியாளர் பாலு மீது பாய்ந்தார். நாயே என்றும் போய்யா என்றும் திட்டினார். மேலும் அவரது கட்சி எம்.எல்.ஏவான அனகை முருகேசன் என்பவர் பாலுவை கீழே பிடித்துத் தள்ளி விட்டார்.
இதுகுறித்து பாலு விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் நேரடியாக ஒரு புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சட்ட ஆலோசனை மேற்கொண்ட போலீஸார் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து விஜயகாந்த் கைது செய்யப்படக் கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசரமாக ஒரு முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தாக்கல் செய்துள்ளார். இன்று மதியே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று விஜயகாந்த்தின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை நீதிபதி ஏற்கவில்லை. மாறாக நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications