சென்னையில் 3 பெண்களை பலாத்காரம் செய்து 2 பேரை கொன்ற வடமாநில வாலிபர் கைது
சென்னை: கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதில் 2 பேரை கொலை செய்த வழக்கில் வடமாநில வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை அடுத்த கால்வாய் ஒரத்தில் இறந்த பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்த போது, சகுந்தலா(55) என்ற பெயர் கொண்ட அந்த மூதாட்டி, அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை செய்த நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையி்ல அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து(45) என்ற பெண் மாயமானதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு புகார் வந்தது. சகுந்தலா கொலை செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மாயமாகி இருப்பது போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேற்கண்ட இரு பெண்களின் செல்போன்களும் திருடப்பட்டு இருந்தது. இதனால் அவர்களின் செல்போன் நம்பர்களை போலீசார் கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஜீகேந்தர்(30) என்பதும், அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் பல தகவல்களை முன்னுக்கு பின்னாக கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முறையாக விசாரித்தனர்.
இதில் சகுந்தலா, மாரிமுத்து மற்றும் இன்னொரு பெண்ணை, ஜீகேந்தர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதில் முதல் 2 பேரையும் கொலை செய்ததும் தெரியவந்தது.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,
பீகார் மாநிலம் கல்யாண்பூர் கிராமத்தை சேர்ந்த எனக்கு 2 மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவி சுமதி பிரசவத்தின் போது இறந்துவிட்டார். அதன்பிறகு லட்சுமி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.
தற்போது கூடுவாஞ்சேரியில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். தினமும் வேலை முடிந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வழியாக நடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக பல பெண்கள் நடந்து செல்வதை பார்த்தேன்.
இதில் வயதான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால், வெளியே தெரியாது என்று திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் அதே வழியாக மண்ணெண்ணை கேன் உடன் வந்த ஒரு பெண்ணை புதருக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன். அதன்பிறகு அவர் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணை ஊற்றி, அவரை எரித்து கொலை செய்ய முயன்றேன்.
ஆனால் அதற்குள் மழை பெய்ததால், அந்த பெண் தப்பியோடிவிட்டார். இதனால் அவரது செல்போனை எடுத்து கொண்டு நானும் அங்கிருந்து சென்றுவிட்டேன். 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவ்வழியாக சென்ற போது, மாரிமுத்து என்ற பெண் தனியாக நடந்து சென்றார்.
அவரையும் வாயை பொத்தி கொண்டு புதருக்கு கொண்டு சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். இதனால் அவரது செல்போனை எடுத்து கொண்டு தப்பியோடிவிட்டேன்.
கடந்த 14ம் தேதி நான் அதே வழியில் சென்ற போது, சகுந்தலா என்பவர் பூ விற்று கொண்டிருந்தார். அவரிடம் நைசாக பேசி முட்புதருக்குள் அழைத்து சென்று கீழே தள்ளினேன். அதில் அவர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரையும் பாலியல் பலாத்காரம் செய்தேன். இந்த நிலையில் நேற்று அவ்வழியாக சென்ற போது, போலீசார் என்னை பிடித்துவிட்டனர் என்றார்.
சிக்கியது எப்படி?:
3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஜீகேந்தர், அவர்களின் செல்போன்களை எடுத்து சென்று எண்களை மாற்றி போட்டு பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பெண்ணின் செல்போன் எண்ணை கண்காணித்த போலீசார், கொலையாளி இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து கைது செய்தனர்.
3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதில் 2 பேரை கொலை செய்து ஜீகேந்தரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications