விமானம் பறக்கும் போது நடுவானில் தூங்கிய விமானிகள்!
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதிலிருந்த விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விமானம் எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் தலைமை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து அவர், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.
இதனால் பதற்றமடைந்த தலைமை விமானி, விமானிகள் அறைக்கு சென்று பார்த்த போது, அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. இதையடுத்து விமானத்தை இயக்கும் பொறுப்பை மீண்டும் எடுத்த கேப்டன், பத்திரமாக உரிய இடத்தில் அதை தரையிறக்கினார். அப்போது கூட 3வது விமானி தூங்கியபடியேதான் இருந்தாராம்.
இவர்களது பெயரை இங்கிலாந்து விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், விமானம் பறக்கும் போது அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான் என்றனர்.
ஏற்கனவே பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் உள்ளது. விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து விமான அமைச்சகமும் கவலை தெரிவித்துள்ளது.
22 மணிநேர வேலை காரணமா?
விமானிகளுக்கு 22 மணிநேரம் வேலைப்பளு இருக்கிறது என்பது விமானிகளின் புகாராகும். விமான நிலையத்திற்கு வந்து பணிக்காக ஆயத்தவேலைகளில் ஈடுபடுவதோடு, 11 மணிநேரம் பறக்க வேண்டும் எனவே விமானிகள் ஓய்வெடுக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. எனவே பணிப்பளுவை குறைக்கவேண்டும் என்று விமானிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications