தானேவின் பாடத்தால் நிலம் புயலை சமாளிக்க தயாராகிறது கடலூர் மாவட்டம்!

தானே புயலால் கடலூர் மாவட்டத்தின் அத்தனை வளங்களும் சூறையாடப்பட்டு மக்கள் தவிப்புக்குளாகினர். அப்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டது. தானே புயல் தாக்கி சில நாட்களுக்குப் பிறகே அதன் கோரத்தை தமிழகம் அறிய முடிந்தது. ஆனாலும் கூட மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது என்பதுதான் அம்மாவட்ட மக்களின் இதுநாள் வரையிலான குமுறல்.
இந்நிலையில் தற்போது நிலம் புயல் சென்னை அருகே கரையைக் கடக்க இருக்கிறது. நிலம் புயலால் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்தான் அதிக மழையை சந்தித்திருக்கிறது. நாகப்பட்டினத்துக்கு அடுத்ததாக கடலூர் மாவட்டம் கனமழையைப் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது, ஒரு வாரம் பெய்த தொடர் கனமழையால் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. பிரதான ஏரி, குளங்கள் நிரம்பின. பெண்ணையாறு, கெடிலம், மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நிலம் புயலால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
புயல், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை சமாளிக்கவும், சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. தானே புயலால் ஏற்பட்ட பாடங்களில் இருந்து அனுபவம் பெற்றுக் கொண்டு தற்போதைய நிலம் புயலை எதிர்கொள்ள அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்கிறார் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.
மக்கள் வெளியேற்றம்
கடலூர், புதுசத்திரம், முட்லூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதிகளில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களிலும் மற்றும் தாழ்வான பகுதி கிராமங்களிலும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். புயல் நிவாரணபணிகளை செய்வதற்காக வெள்ளதடுப்பு அதிகாரியாக செந்தில்குமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளார். அவர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் துனை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் கீழ் 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
மீட்புக்கு மும்முரம்
புயலின்போது மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பதற்கு மீட்பு படைகளும் தயாராக உள்ளன. மீட்பு படகுகளையும் தயாராக வைத்துள்ளனர். ஏரி, குளங்கள் உடைந்துவிடாமல் தடுக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனைத்த ஏருகற், குளங்களையும் கண்காணித்து வருகின்றனர். தேவையான மணல் மூட்டைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரிசெய்வதற்காக அனைத்து மின் ஊழியர்களும் பணியில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே புதுவையிலும் கன மழை பெய்து வருகிறது. புதுச்சேரி துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது












Click it and Unblock the Notifications