நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது

வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.
நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இன்று மாலை 4.45 மணி அளவில் சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை முழுவதுமாக கடக்க, சுமார் 2 மணி நேரம் எடுத்து கொண்டது.
புயல் கரையை கடந்த போது கடற்கரையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
புயல் முழுவதுமாக கரையை கடக்கும் வரை பலத்த சேதமடையாமல் என்ற அச்சம் நிலவியதால் 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
8-ம் எண் புயல் கூண்டு
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்தது. இதனால் சென்னை துறைமுகத்தில் 8ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
அலுவலகங்கள் விடுமுறை:
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மின்சாரம் துண்டிப்பு
நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. விபத்துகளை மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications