பரமக்குடி கொலை: தென் மாவட்டங்களில் அமைதிகாக்க வைகோ வேண்டுகோள்
சென்னை: தேவர்ஜெயந்தியை ஒட்டி பசும்பொன் கிராமத்திற்கு சென்றவர்கள் மீது பரமக்குடி அருகே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூன்றுபேர் உயிரிழந்தனர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 30 இல் பரமக்குடி வட்டாரத்தில் நடைபெற்ற படுகொலைகள், பேர் இடியாக நெஞ்சில் விழுந்து, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன். சொந்தப் பகையோ, முன்விரோதமோ இல்லாதபோதும், வன்முறை தாக்குதலுக்கு ஆளாகி,கொல்லப்பட்டனர் என்பது மனதைப் பதற வைக்கிறது.
இது ஈவு இரக்கமற்ற கொலைபாதகச்செயலாகும். இத்தகையக் கொடூர வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் கண்டத்தைத் தெரிவிப்பதோடு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தமிழக அரசும்,காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில், தாங்கமுடியாத துக்கத்தால் வாடும் மக்கள் ஆத்திர உணர்ச்சிக்குஆளாகி, வன்முறை மோதலுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சகோதரனாக வேண்டுகிறேன். மோதல் நேர்ந்தால், கலவரம் ஏற்பட்டால், சின்னஞ்சிறு பிள்ளைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், அமைதியாக வாழ விரும்புகிற மக்கள் அனைவருமே ஆபத்துக்கு ஆளாவார்கள். எனவே தெற்கு சீமைக்கு இந்த அபாயம் நேராமல் தடுக்க, அமைதி காக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications