சல்மான் குர்ஷ்த் தொகுதியில் அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினர் மீது தாக்குதல்
ஃபரூக்காபாத்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை மோசடி தொடர்பாக அவரது சொந்தத் தொகுதியான ஃபரூக்காபாத்தில் பிரச்சாரம் செய்த அர்விந்த் கெஜ்ரிவால் குழு மீது காங்கிரசாத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குர்ஷித்- கெஜ்ரிவால் மோதல்
சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறக்கட்டளை நடத்துவதாகக் கூறி மோசடியான ஆவணங்கள் மூலம் மத்திய அரசிடம் நிதி உதவி பெற்றனர் என்பது கெஜ்ரிவால் குழுவின் புகார். இப்புகாரை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திய கெஜ்ரிவால், குர்ஷித் பதவி விலகும் வரை அல்லது பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். மேலும் சல்மான் குர்ஷித்தின் தொகுதியான ஃபரூக்காபாத்தில் அவருக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் தமது தொகுதிக்குள் நுழைந்துவிட்டு உயிரோடு திரும்பிப் போய்விடுவாரா கெஜ்ரிவால்? என்று எச்சரித்திருந்தார் குர்ஷித்.
ஃபரூக்காபாத்தில் கெஜ்ரிவால்- காங்கிரசார் கலாட்டா
இந்நிலையில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சல்மான் குர்ஷித்துக்கு பதவி உயர்வாக வெளியுறவுத் துறை அமைச்சரானார். கெஜ்ரிவாலும் விடுவதாக இல்லை. இன்று ஃபரூக்காபாத்துக்கு தமது ஆதரவாளர்களுடன் சென்று குர்ஷித்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். கெஜ்ரிவாலின் பிரச்சாரத்துக் கூட்டத்தை முற்றுகையிட்ட காங்கிரசார் அங்கு மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கெஜ்ரிவால் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் கெஜ்ரிவால் கூட்டத்தைக் கண்டித்து கறுப்புக் கொடிகள் ஏந்தி ஆர்ப்பாட்டங்களையும் காங்கிரசார் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications