நிலம் புயலில் சாய்ந்த நூற்றுக்கணக்கான மரங்கள்: புதிய மரங்களை நட மாநகராட்சி முடிவு

நிலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த போது பயங்கர சூறைக்காற்று வீசியது. சென்னையில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. போயஸ்கார்டன் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் சட்டப்பேரவையில் இருந்து முதல்வர் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்திய பிறகே முதல்வர் வீட்டிற்குத் திரும்பினார். இதேபோல் நேற்று நிலம் புயல் ஆடிய தாண்டவத்திற்கு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மரங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. சுரங்கப்பாதைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. சில இடங்களில் பொதுமக்களே முன்வந்து சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மீனம்பாக்கத்தில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
ஏற்கனவே சென்னை மாநகரில் தற்போது குறைந்த அளவிலான மரங்களே உள்ளன. இதனால் மாநகரம் முழுவதும் சாலையோரங்களில் மரங்களை நடும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இப்போது வீசிய புயலில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய மரங்களை நட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications