தமிழக-கேரள எல்லையில் முட்டை லாரிகள் நிறுத்தம்: தடையை நீக்குமா கேரள அரசு- இன்று தெரியும்
நாமக்கல்: கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதையடுத்து கேரள அரசு தமிழக முட்டை லாரிகளை எல்லையிலேயே நிறுத்தி வைத்துள்ளதால் 3 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நல்ல தம்பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் நோயால் வான் கோழிகள் இறந்ததையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தீவன மூலப்பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் இல்லை. இருப்பினும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று கூறிய கேரள அரசு தமிழகத்து முட்டை லாரிகளை மாநிலத்திற்குள் விடாமல் கடந்த 4 நாட்களாக எல்லையிலேயே நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் சுமார் 250 லாரிகளில் 3 கோடி கோழி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இது குறித்து தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அரசு அதிகாரிகள், தொழில்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டுள்ள இந்த பேச்சுவார்த்தையில் இன்று நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications