82 வயது தாயை கட்டிலோடு பஸ் ஸ்டாப்பில் போட்டு விட்டுப் போன மகன்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே 82 வயதான தங்களது தாயை பராமரிக்க முடியாத மகன் கட்டிலோடு தூக்கி வந்து பஸ் ஸ்டாப்பில் போட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் கண்டிகா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரங்கையா என்பவரின் மனைவி சுப்பம்மா. 82 வயதான இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் மறைவுக்குப் பின்னர் மூதாட்டி சுப்பம்மா தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் அவரது மகள் தன்னால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை என்று கூறி, தனது அண்ணன் முனிரத்தினம் நாயுடு வீட்டில் கொண்டு போய் விட்டார்.
ஆநால் முனிரத்தினமோ, தனது தம்பி நாதமுனி நாயுடு வீட்டுக்குக் கொண்டு போய் தாயை விட்டார். ஆனால் நாதமுனிக்கும் தனது தாயைப் பார்க்க விருப்பமில்லை. இதையடுத்து கட்டிலில் படுத்திருந்த தனது தாயை, அப்படியே கட்டிலோடு தூக்கி வந்து திருப்பதி பைபாஸ் சாலையில் பஸ் ஸ்டாப்பில் வைத்து விட்டு அவர் பாட்டுக்குப் போய் விட்டார்.
இப்படி நடு ரோட்டில், கடும் குளிரிலும், மழையிலும் கடந்த 15 நாட்களாக வாடிப் போய் நடுங்கிக் கிடந்தார் சுப்பம்மா. அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட டீக்கடைக்காரர் ஒருவர் அவருக்கு சாப்பாடு போட்டார். மேலும் இந்த செய்தி திருப்பதிக்குப் பரவியது.
இதையடுத்து எஸ்.பி. பிரபாகர் ராவ் அந்த பரிதாபத்துக்குரிய பாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். ஆனால் பாட்டி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மகன் வீட்டுக்கே என்னை அனுப்பி வையுங்கள், நான் அங்குதான் போவேன் என்று கூறினார்.
இதையடுத்து நீங்கள் முதலில் காப்பகத்துக்குப் போங்கள், உங்களது மகன்களிடம் பேசி விட்டு அனுப்பி வைக்கிறோம் என்று சமாதானப்படுத்தி காப்பகத்திற்கு மூதாட்டியை அனுப்பி வைத்தனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications