பால் தாக்கரே உடல்நிலை கவலைக்கிடம்: அவசர கூட்டத்தை கூட்டியது சிவசேனா
மும்பை: சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், அவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
கடந்த 1966ம் ஆண்டு சிவசேனா கட்சியை தோற்றுவித்தவர் பால் தாக்கரே. தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாடாளுமன்ற கூட்ட தொடர் துவங்கும் முன்னர், சிவசேனா எம்.பிக்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது பால் தாக்கரேயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரது மகனும், கட்சியின் நிர்வாக தலைவருமான உத்தவ் தாக்கரே, கட்சி செயற்குழுவின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த உத்தவ் தாக்கரே கூறியதாவது,
இந்த செயற்குழு கூட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. இது ஒரு அவசர கூட்டம் அல்ல. இதில் எனது தந்தையின் உடல்நிலை குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. சிவசேனா தலைவரின் உடல்நிலையை கண்டு அனைவரும் வருத்தம் அடைந்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தற்போது 86 வயதான பால் தாக்கரே, கடந்த வாரம் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, உடல் ரீதியாக நான் தளர்ந்துவிட்டேன். என்னால் நடக்க கூட முடியவில்லை. நான் மிகவும் பலவீனமாகிவிட்டேன். எனவே எனது காலத்திற்கு பிறகு உங்களின் ஆதரவை, எனது மகன் உத்தவ் மற்றும் பேரன் ஆதித்யா ஆகியோருக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.
பால் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே சில ஆண்டுகளுக்கு முன் கட்சியை உடைத்து தனியே மகாராஷ்டிர நவநிர்மான சேனா என்ற கட்சியை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சிவசேனா பலவீனமடைந்துள்ள நிலையில் தனது மகனுக்கு ஆதரவு தருமாறு கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications