கேஜ்ரிவால் மீது ஷூ வீசியவர் சோனியா குடும்பத்து நண்பராம்!
டெல்லி: டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஷூ வீசப்பட்டது. இந்த நிலையில் ஷூவை வீசியவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மீது குற்றம் சாட்டி அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார் கேஜ்ரிவால். அப்போது கூட்டத்தில் இருந்த ஜெகதீஷ் சர்மா என்பவர் எழுந்து, அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன்? என்று கேட்டு ஆவேசமாக பேசினார்.
மேலும் இந்திய வருவாய் அதிகாரியான கேஜ்ரிவால் ஏன் டெல்லியை விட்டு மற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.
அப்போது மேலும் 3 இளைஞர்கள் சர்மாவுக்கு ஆதரவாகவும், கேஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது சர்மா திடீரென தனது ஷூவை கழற்றி கேஜ்ரிவாலை நோக்கி வீசினார். அதனை கேஜ்ரிவால் ஆதரவாளர்கள் அதைத் தடுத்துவிட்டனர்.
ஷூ வீசிய நபர் யார் என்று ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு விசாரணை நடத்தியதாம். அதில், அந்த நபர் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் என்று தெரிய வந்ததாம். இதுதொடர்பான புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஒரு புகைப்படத்தில், சோனியா காந்தியுடன் ஜெகதீஷ் சர்மா அமர்ந்துள்ளார். மற்றொரு படத்தில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ராவுடன் பேசிக் கொண்டிருக்கிறார் சர்மா.
இந்தப் புதிய புகைப்பட ஆதாரத்தால் சர்ச்சை பெரிதாகியுள்ளது. ஆனால் ஷூவை வீசியபோது, தான் யாருடைய வலியுறுத்தலாலும் இப்படிச் செய்யவில்லை. கேஜ்ரிவால் குழுவினர் நாட்டை முட்டாளாக்கி வருகின்றனர் என்று கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications