வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

பயமுறுத்திக் கொண்டிருந்த நிலம் புயல் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாமல் போய் விட்டது. இருந்தாலும் புயல் ஆந்திரக் கரையோரம் நிலை கொண்டிருந்ததால், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
இருப்பினும் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் நேற்று மழை இல்லை. அதேசமயம், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் கடும் குளிர் நிலவியது.
இந்த நிலையில், நிலம் புயல் தற்போது காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்து விட்டதாகவும், இதன் காரணமாக, வட கிழக்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில், தமிழகத்தை நோக்கி வந்த நிலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து,
மேற்கு மற்றும் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா மாநிலம் ராயல்சீமா - அனந்தபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உள்ள ஈரமான காற்றை ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும். சென்னை உள்ளிட்ட ஒருசில நகரங்களிலும் மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு நிலையானது படிப்படியாக குறைந்து மறைந்துவிடும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications