அடுத்த மத்திய ஆட்சி மாநில கட்சிகளின் கையில்..மமதாவை சந்தித்த பிறகு வைகோ பேச்சு!

கொல்கத்தாவுக்கு நேற்று சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்கு முதல்வர் மமதாவை சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 24 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தபோது, வைகோ ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி டெல்லியில், கான்ஸ்டிட்டியூசன் கிளப் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களையும் அழைத்து வருகிறார் வைகோ. அந்த அடிப்படையில் மமதாவையும் சந்தித்து நேரில் அழைத்தார். வைகோவின் அழைப்பை மமதாவும் ஏற்றார்.
இந்த சந்திப்பின்போது, சிங்கூர் நிலப் பிரச்சினைக்காக, கொல்கத்தாவில் தாம் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, சென்னையில் இருந்து வந்து வைகோ தனக்கு ஆதரவு தெரிவித்ததை நினைவு கூர்ந்த மமதா, அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் நேதாஜி பிறந்த நாள்விழாவில், கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். அதை வைகோ ஏற்றார்.
மமதாவுடனான சந்திப்பின்போது வைகோ கூறுகையில், மத்திய அரசில் குவிக்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பலவற்றை, மாநிலங்களுக்கு வழங்கவும், மத்திய அரசினுடைய எதேச்சதிரகாரப் போக்கை மாற்றவும், உறுதிகொண்டு போராடுவதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள சாதாரண மக்கள், டாக்சி டிரைவர் முதல், பெட்டிக்கடைக்காரர் வரை மம்தா பானர்ஜி மீது எல்லையற்ற அன்பும் மதிப்பும் கொண்டு இருப்பதை அவர்கள் வாய்மொழியாக தான் அறிந்ததையும் அவரிடம் குறிப்பிட்டார் வைகோ.
மமதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்தும், ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு செய்த துரோகத்தையும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் 2010 இல் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதையும், 2011 இல் அமெரிக்க அரசு சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததையும், தற்போதும் இலங்கை இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப் பற்றியும் விளக்கினார்.
மேலும் அவர் கூறுகையில், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளே இந்திய அரசைத் தீர்மானிக்கும் என்றார் வைகோ. வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மேற்கு வங்க அமைச்சர் ஆருக் பிஸ்வாஸும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications