நள்ளிரவில் திடீர் திடீர்... இடியுடன் சென்னையை பயமுறுத்திய மழை!
சென்னை: சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சென்னையில் பலத்த இடியுடன் கன மழை பெய்ததால் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும் இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களையும், கடலோர மாவட்டங்களையும் சமீபத்தில்தான் நிலம் புயல் பயமுறுத்தி விட்டுப் போயிருந்தது. பெரிய அளவில் சேதம் இல்லாமல் இந்த புயல் கரையைக் கடந்து போய் விட்டதால், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
கடந்த சில நாட்களாக அவ்வளவாக மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று கடலோர மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்தது. தலைநகர் சென்னையில், பகலில் நகர்ப் பகுதியில் நல்ல மழை பெய்தது. அதேசமயம் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவுக்கு மேல் பலத்த இடியுடன் திடீரென கன மழை பெய்ததால், மக்கள் பீதியடைந்தனர்.
இந்த மழைக்குக் காரணம் வெப்பச் சலனம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருந்தது. வங்கக் கடலிலும், அடுத்து அரபிக் கடலிலும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது.
இதனால் ஏரிகள், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்கிழக்கு வங்கக்கடலில் வலுவடைய தொடங்கி புயலாக மாறி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை வரும் 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications