ஆந்திராவை புரட்டிப் போட்டிருக்கும் நிலம் புயல்- 25 பேர் பலி! 150 கிராமங்கள் மூழ்கின!
ஹைதராபாத்: தமிழகத்தை மிரட்டிவிட்டு ஆந்திராவுக்குப் போன நிலம் புயல் கோரத்தாண்டவமாடியிருக்கிறது. இதுவரை இப்புயல் 25 பேரை பலி கொண்டிருக்கிறது. 150 கிராமங்களை வெள்ள நீரில் மூழ்கடித்திருக்கிறது. சுமார் 1 லட்சம் பேரை இடம்பெயர வைத்திருக்கிறது,
அந்தமான் தீவுகள் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலம் புயலாக உருவெடுத்தது. இப்புயல் தமிழகத்தில் சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் கரையைக் கடந்து திரு வண்ணாமலை, வேலூர் வழியாக ஆந்திரா கடற்பரப்பில் நிலை கொண்டது.
இதனால் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் காற்று மழையும் வெளுத்து வாங்கியது. விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 150 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 2.5 லட்சம் விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
விசாகப்பட்டினத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியோரை கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்டிருக்கின்றன. கடற்படை ஹெலிகாப்டர் மூலம் இம்மாவட்ட்டத்தில் 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டம் நரசபூரில் 31 செ.மீ, அமலாபுரத்தில் 27 செ.மீ, ராஜமுந்தரியில் 25 செ.மீ மழை பொழிந்துள்ளது. நிலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications