கார்கில் போருக்கும் அன்னிய முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ’சிறுவன்’ ராகுல்: சிவசேனா சாடல்
டெல்லி: காங்கிரஸ் கட்சி நேற்று நடத்திய "திராணியை" காட்டும் பேரணியில் பேசிய அக்கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, கார்கில் போரையும் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தையும் ஒப்பிட்டதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
ராகுல் பேசியது என்ன?
கார்கில் போரின்போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தபோதும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் காங்கிரசை பாரதிய ஜனதா ஆதரிக்கவில்லை என்று நேற்று ராகுல் பேசினார்.
சிவசேனா கண்டனம்
கார்கில் போருடன் அன்னிய நேரடி முதலீட்டை ஒப்பிட்டுப் பேசிய ராகுலுக்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத் கூறியுள்ளதாவது:
கார்கில் போருக்கும், அன்னிய தலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ராகுல் அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர். ராகுல் வெறும் சிறுவன் மட்டுமல்ல. பக்குவமும் இல்லாதவர். கார்கில் என்பது பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மேற்கொண்ட போர். அப்போது நாட்டின் எதிரிகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது நம் அனைவரின் கடமை.
வால்மார்ட் போன்ற ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தங்கள் லாபத்திற்காக சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற பெயரில் இந்திய சந்தையில் நுழைய ஆர்வமாக இருக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications