மோடியின் ஹிட்லிஸ்ட் எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு டிக்கெட் இல்லை?

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. இவற்றுக்கு இரண்டு கட்டமாக டிசம்பர் 13,17 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.
ஆளும் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் மோடிக்கு எதிரான பாஜக தலைவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வரான கேசுபாய் படேல் தலைமையில் ஓரணியாக திரண்டிருப்பதால் பாஜக வாக்குகள் பிளவுபடக் கூடும் என்று கருதும் காங்கிரஸ் ஆட்சிக் கனவில் இருக்கிறது.
குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியை மோடி தம் வசம் கொண்டு வந்தது முதல் ஒவ்வொரு தேர்தலிலுமே கணிசமான எம்.எல்.ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 2002-ம் ஆண்டு தேர்தலில் 121 எம்.எல்.ஏக்களில் 18 பேருக்கும் 2007-ல் 127 எம்.எல்.ஏக்களில் அதிரடியாக 47 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை மோடி. இம்முறையும் இதே யுக்தியை மோடி கையிலெடுப்பார் என்றே கூறப்படுகிறது. தற்போதைய பாஜக எம்.எல்.ஏக்கள் 120 பேரில் அனேகமாக 50 பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்கின்றனர். இப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள் கேபாய் படேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சியில் இணையக் கூடும் அல்லது போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கக் கூடும்.
இருப்பினும் கேசுபாய் படேலின் புதிய கட்சியால் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கையிலெடுத்த சாதி ஆயுதம் அக்கட்சிக்கு கொடுத்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஜாம்நகர், சுரேந்தர்நகர், ஆனந்த், வல்சாத் உள்ளிட்ட பழங்குடிகள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொகுதிகளில் கணிசமான வெற்றியை காங்கிரஸ் பெற்றிருந்தது. நரேந்திர மோடியை எதிர்க்கக் கூடிய வலுவான ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லாததால் சாதி ரீதியான அணுகுமுறையை காங்கிரஸ் கையாள்கிறது என்பது பொதுவான கருத்து.
நரேந்திர மோடி வழக்கமாக பின்பற்றும் யுக்தி இம்முறை கை கொடுக்கப் போகிறதா? காங்கிரஸ் புதிதாக கையில் எடுத்திருக்கும் சாதிய ரீதியான அணுகுமுறை அனுகூலமாக இருக்கப் போகிறதா? என்பதுதான் குஜராத் மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications