ஏர்செல் விவகாரம்: மலேசியா, மொரீசியசில் இன்னும் விசாரணை முடியவில்லை- சிபிஐ

தன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்ததாகவும், ஆனால் அதைத் தராமல் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும் அதன் உரிமையாளர் சிவசங்கரன் சிபிஐயிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு நிர்பந்திக்கப்பட்டதாகவும், நெருக்கடியால் நான் விற்ற பிறகு ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்டதாகவும் சிவசங்கரன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஏர்செல்லை மேக்சிஸ் வாங்கிய பிறகு சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனின் இன்னொரு நிறுவனம் ரூ. 450 கோடி வரை முதலீடு செய்தது.
இந்த விவகாரம் வெடித்ததையடுத்து தயாநிதி மாறன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் தயாநிதி மாறன் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.
ஆனால், எப்ஐஆர் தாக்கல் செய்து ஓராண்டு ஆகியும் இந்த வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்கவில்லை என்று கூறி அரவிந்த் கெஜரிவாலின் குழுவில் உள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் நிலை அறிக்கையை (status report) வரும் 7ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அந்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.
அதில், ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவில் எங்களது விசாரணை முடிந்துவிட்டது. ஆனால், பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கருதப்படும் மலேசியா, மொரீசியசில் இன்னும் விசாரணை நடந்து கொண்டுள்ளது.
மலேசியாவில் சிவகங்கரன் இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் பதவியிலும், பணத்திலும், அதிகாரத்திலும் உள்ளவர்கள் என்பதால் விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று சிபிஐ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications