கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்தெந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது?: சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்தெந்த துறைகளிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணுமின் நிலைய வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்கிழமையன்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘‘1989-ம் ஆண்டு காலாவதியான அனுமதியை வைத்து 2001-ல் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு 2004-ம் ஆண்டு தான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
எந்தெந்த துறைகள்
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராசரன், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனைத்து துறைகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது யூனிட்டுகள் செயல்பட கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்தெந்த துறைகளிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications