கோவில்பட்டி பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து எல்.கே.ஜி. மாணவன் விரல் துண்டிப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் மேல்கூரை தளம் பெயர்ந்து விழுந்ததில் 9 எல்.கே.ஜி. மாணவர்கள் காயம் அடைந்தனர். அதிலும் ஒரு மாணவனின் பெருவிரல் துண்டானது.
கோவில்பட்டி வக்கீல் தெருவில் உள்ளது செவன்த் டே அட்வென்டிஸ்ட் உயர் நிலைப் பள்ளி. நேற்று அப்பள்ளியில் உள்ள எல்.கே.ஜி. வகுப்பறையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியை பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கான்கிரீட் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு மொத்தமாக பெயர்ந்து விழுந்தது.
அப்போது வகுப்பறையில் இருந்த குழந்தைகள் மீது இடிபாடுகள் பட்டதில் 9 குழந்தைகள் காயம் அடைந்தனர். நடப்பது என்னவென்று தெரியாமலும், காயத்தால் வலி தாங்க முடியாமலும் குழந்தைகள் அலறத் தொடங்கினர். உடனே பக்கத்து வகுப்புகளில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து காயம் அடைந்த குழந்தைகளை தூக்கிச் சென்றனர். பிற குழந்தைகளையும் வெளியே தூக்கிச் சென்றனர்.
சில குழந்தைகள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அதிலும் கௌதம்(4) என்ற குழந்தையின் பெருவிரல் துண்டானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். கௌதம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனின் துண்டான விரலும் அனுப்பி வைக்கப்பட்டது.
கௌதமின் பெருவிரலை மீண்டும் பொருத்த வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்த பிறகே அவனின் பெற்றோர் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications