தரைதட்டிய கப்பல் மாலுமிகளைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: நிலம் புயலால் சென்னையில் தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்கள் 5 பேரைக் காப்பாற்றிய மீனவர்களைப் பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டிய நிலம் புயலின்போது பிரதிபா காவிரி என்ற கப்பல் சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. இக்கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் உயிர் காக்கும் படகுகள் மூலம் தப்பிக்க முயன்றனர். ஆனால் அலையின் வேகத்தில் சிக்கி அவர்களின் படகுகள் கவிழ்ந்து அவர்கள் உயிருக்கு போராடினர். அப்போது ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் வடிவேலு, பழனி மகன் கலைமணி, வைத்தியநாதன் மகன் உதயமூர்த்தி மற்றும் கரிவரதன் மகன் மதன் ஆகிய 4 மீனவர்கள் கோபி என்பவரின் படகில் ஏறி கப்பல் மாலுமிகளைக் காப்பாற்ற கடலுக்கு சென்றனர்.
அவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்று உயிருக்கு போராடிய 5 மாலுமிகளைக் காப்பாற்றி கரை சேர்த்தனர். அவர்களின் தன்னலமில்லா இந்த சேவையை பாராட்டும் வகையில் அவர்கள் 4 பேருக்கும், படகு உரிமையாளரான கோபிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications