குரூப் 2 மறுதேர்வால் அரசுக்கு எத்தனை லட்சம் விரயம்? கருணாநிதி கேள்வி
சென்னை: குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்துவதால் அரசுக்கு எத்தனை லட்சம் விரயம் என்பதை தேர்வாணையம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்களில் 2.7 லட்சம் பேர் எழுதவில்லை. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தேர்வு நடைபெற்றபோது, நன்றாகத் தேர்வு எழுதியிருந்த பல்லாயிரக்கணக்கான பேர், நிச்சயம் தேர்வு பெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், வினாத்தாள் வெளியானதால் குரூப் 2 தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
ஆறரை லட்சம் பேர் எழுதிய தேர்வில், ஏதோ ஒரு பகுதியில் வினாத்தாள் வெளியான காரணத்துக்காக தேர்வு எழுதிய அத்தனை பேருடைய வாழ்க்கையையும் கெடுத்திருக்கக் கூடாது.
தேர்வு எழுதியவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய தேர்வாணையத்தின் எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வழக்கு என்று சொல்லி, ஏதோ கடைக்கோடியில் உள்ள ஒரு சிலரை பெயருக்கு கைது செய்து நாள்களைக் கடத்துகின்றனர்.
தேர்வினை ரத்து செய்துவிட்டு, இப்போது மறு தேர்வு நடத்துவதன் மூலம் எத்தனை லட்சம் ரூபாய் அரசுக்கு விரயம் என்பதை தேர்வாணையம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்த ஆண்டுக்குச் செல்ல முடியாது எனும் நிலைமை உள்ளது. இந்த நடைமுறையால் கிராமப்புற, ஏழையெளிய, நடுத்தர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனையில் உடனடியாக அரசு தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications