பனை வெல்லத்தைப் பற்றி பேசாத நாளே இல்லையே, குமரி.. அனந்தனுக்கு கருணாநிதி 'கொட்டு'!!

பனை வெல்லத்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் பேசத் தவறியதில்லை. நான் அவரது உழைப்பைப் பாராட்டி பனைமரத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராகவே நியமித்தேன். ஆனால் அவரோ ஜெயலலிதாவைப் பாராட்டிப் புகழந்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியிருப்பதாவது...
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், நீண்ட நாள் காங்கிரஸ்காரர். அவர் அந்தக் கட்சியில் வகிக்காத பதவிகள் கிடையாது. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். நான் முதல்வராக இருந்த நிலையில், என்னைச் சந்தித்தபோதும், பல நிகழ்ச்சிகளிலும், கடிதங்களிலும் பாராட்டிப் பேசாத வார்த்தைகளே இல்லை.
பனை வெல்லத்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் பேசத் தவறியதில்லை. நான் அவரது உழைப்பைப் பாராட்டி பனைமரத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராகவே நியமித்தேன். அந்தப் பணியையும் அவர் திறம்பட நடத்தி; தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்ட 33 ஆயிரத்து 416 தொழிலாளர்களில் 7 ஆயிரத்து 401 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 1 கோடியே 55 லட்சத்து 49 ஆயிரத்து 745 ரூபாய் உதவித்தொகை கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆட்சியில் அப்படி ஒரு வாரியம் செயல்படுவதாகவே தெரியவில்லை. மற்ற நல வாரியங்களைப் போலவே இந்த வாரியத்தின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் அம்மையார் ஜெயலலிதாவை குமரி அனந்தன் பாராட்டிப் பொழிந்துள்ளார்.
அம்மையாருக்குப் பாராட்டு மழை பொழிந்திருக்கும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், தற்போது அம்மையார் ஆட்சியில் பனை மரத் தொழிலாளர் நல வாரியத்திற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும் என்பதற்காக கோரிக்கை வைத்திருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications