தேமுதிகவுக்குப் போக மாட்டேன்.. நாஞ்சில் சம்பத்: திமுகவுக்கு செல்ல வாய்ப்பு!

விரைவில் இவர் மதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் அல்லது வெளியேற்றப்படப் போகிறார் என்று ஒரு பேச்சு நிலவி வரும் நிலையில் 'நக்கீரன்' இதழுக்குப் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் சம்பத். அதன் சில துளிகள்...
என் தரப்பில் நான் குற்றம் நினைக்கவில்லை. இயல்பாகவே எந்தத் தவறும் இழைக்கிற மனோபலம் எனக்கில்லை. வைகோ மனம் சுழிக்கும்படி அவரிடம் நான் எதுவும் கேட்கவும் இல்லை
18 ஆண்டு கால ம.தி.மு.க. பயணத்தில் 3 சட்டமன்றத் தேர்தல், 3 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து ஒரு நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் எனக்கு ஒரு தொகுதி தாருங்கள் என்று கேட்கவும் இல்லை என்று கூறியுள்ள நாஞ்சிடம், ஒருவேளை நீங்கள் சீட் கேட்டிருந்தால் வைகோ தந்திருப்பாரா? என்ற கேள்விக்கு, அவர் முடிவை நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் நாஞ்சில்.
மேலும் உங்களை வைகோ, கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்ற அரசல் புரசல் செய்திகளை நீங்கள் நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஆமாம். 18 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போடுற மதிமுக கரை சேர வேண்டுமென்று அக்கறையோடு கடமையாற்றிய என்னை வைகோ சங்கொலியில் நான் ஒரு குடிலன் என்றும், விஷ விதை தூற்றுகிறவன் என்றும் மனசாட்சியற்ற முறையில் எழுதியிருக்கிறார்.
இதேபோல மலரக்கூடாது என்று மறுக்கப்படுகிற மொட்டாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்படுற கன்றாகவும் என்னை ஒவ்வொரு நாளும் உதாசீனப்படுத்தி சத்தம் இல்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.
நீங்கள் தேமுதிகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் தேமுதிகவை ஒரு இயக்கமாகவே நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கடைசியாக இரண்டு தலைவர்களுக்கு (கருணாநிதி, வைகோ) தொண்டனாக இருந்திருக்கிறீர்கள். அந்த இரு கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு, இது விரிவாக எழுத வேண்டிய ஒரு புத்தகம். ஒன்றுமட்டும் சொல்வேன்; கலைஞர் அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தலைப்புச் செய்தி என்று கூறியுள்ளார் சம்பத்.
இதன்மூலம் மதிமுகவிலிருந்து விலகினால் அவர் திமுக பக்கம் வரக் கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் முயற்சி நடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications