திருப்பூரில் மின்தடை நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 5.78 லட்சம் மின் இணைப்புகளுக்கு தினமும் 500 மெகாவாட் மின்சாரம் தேவை. மின் தேவையில் 200 மெகாவாட் வரை மின்சாரப் பற்றாக்குறை இருந்த காரணத்தால் பகலில் 8 மணி நேரமும் இரவில் 8 மணி நேரமும் மின் தடை ஏற்பட்டு வந்தது.
கடந்த மாதம் இறுதியில் நிலம் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் காற்றாலை மின் உற்பத்தியும் ஆயிரம் மெகாவாட் அதிகரித்தது. இதனால் கடந்த சில மாதங்களாக அமலில் இருந்த 16 மணி நேர மின்தடை 10 மணிநேரமாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருப்பூரில் மின்தடை நேரம் மீண்டும் 16 மணிநேரமாக அதிகரித்துள்ளது.
திருப்பூரில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இருந்த மின் தடை நேரம் காலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதியம் 12 மணி முதல் 6 மணி வரையிலும் பகல் நேரத்தில் மொத்தம் 8 மணிநேரம் மின் வெட்டு ஏற்படுகிறது.
மின்தடை ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒவ்வொரு மாதிரியாக அமல்படுத்தப்படுகிறது. ராயபுரம், ரயில்நிலையம் பகுதிகளில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், 10 மணி முதல் 2 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் தடை செய்யப்படுகிறது.
இரவில் தூக்கம் போச்சு
இரவு நேரத்தில் 7 முதல் 8, 9 முதல் 10, என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை காலை 5 மணி வரை ஓரு மணிநேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடை படுகிறது. இதனால் இரவில் கொசுக்கடியில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர் திருப்பூர் வாசிகள்.
மின் இருப்பைப் பொருத்து ‘லோடு செட்டிங்' சென்டர் மூலம் நேரடியாக மின் நிறுத்தம் , துணை மின் நிலையங்களுக்கு உத்தரவு வருவதால், சில நேரங்களில் கூடுதல் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பகல் 8 - ராத்திரி 8!
பகலில் 8 மணிநேரம், இரவில் 8 மணிநேரம் என மொத்தம் 16 மணிநேரம் மின்சாரம் தடைபடுவதால் திருப்பூர் மாவட்ட பொதுமக்களும், பனியன் உற்பத்தியாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications