எஸ், ஜெயலலிதா பிரதமராகலாம்... பிரான்ஸ் பத்திரிக்கை பாராட்டு!
பாரீஸ்: முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, ஆற்றல் காரணமாக அவர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு உயரக் கூடிய தகுதியுடன் இருப்பதாக பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்று அங்கிருந்தபடியே முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி செய்தி போட்டுள்ளது. அந்தப் பத்திரிக்கையின் பெயர் யூரோப் கிரியேட்டிவ் என்பதாகும். இதன் 'ஓனர்' யார் என்று தெரியவில்லை. இந்தப் பத்திரிகைதான் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசி கட்டுரை போட்டுள்ளது.

இந்திராவுக்கு அப்புறம் யாருமே வரலையே
உலகில் பெரிய ஜனநாயக நாடாக 4-ம் இடத்தில் இந்தியா உள்ளது. பெண்களை அச்சுறுத்தக் கூடிய நாடாக இந்தியா இருந்தபோது பெண் இனத்தை சார்ந்த இந்திரா காந்தி சக்தி மிகுந்த பெண்ணாக இருந்து 15 ஆண்டு காலம் பிரதமராக இருந்தார். அதற்கு பின் அந்த இடத்திற்கு பெண் இனத்தைச் சேர்ந்த யாரும் வரவில்லை.

ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் தகுதி உள்ளது
தற்போது அந்த இடத்திற்கு ஜெயலலிதா மற்றும் மம்தா பானர்ஜி இடம் பெற்ற போதிலும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே அந்தத் தகுதி உள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்தால் கலைத்துறையில் புகழ் பெற்ற இடத்தில் இருந்து அப்போது தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆரின் நம்பிக்கையாளராக இருந்தார்.

'அம்மா' என்று அழைக்கிறார்கள்
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் பல இன்னல்களை அனுபவித்தும் பல்வேறு சோதனைகளை கடந்தும் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார். மக்களுக்காக திருமணம் செய்யாமல் தியாக வாழ்வு மேற்கொண்டார். மக்களை தன் குழந்தையாக நினைத்து ஆட்சி செய்தார். இப்படி மக்களின் மீது இவரின் தீராத அக்கறை கொண்டதால் மக்கள் இவரை தாயாக நேசித்து அம்மா என்று அழைக்கிறார்கள்.

மடிக்கணினி வழங்கியது புதுமை, புரட்சி!
மகளிர் மற்றும் மாணவர்கள் எப்போதும் பிறரை சார்ந்து வாழ வேண்டும் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து பெண்கள் சுயமாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் வகையில் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கியும், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியும் புதுமையும், புரட்சியும் படைக்கிறார். கறை படிந்த அரசியலாக இந்தியா உள்ளது.

கறைபடியாமல் இருந்து..
அதை பெண்கள் கையில் ஒப்படைத்தால் சரி செய்து வளம் பெறுமா என்ற கேள்வி எழுப்பி அதற்கு முடியும் என்று, தற்போது தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்று முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தன் புன்சிரிப்புடன் வாக்காளர்கள் நம்பிக்கையைப் பெற்று கறைபடியாமல் இருந்து இந்தியாவை வல்லரசு நாடாக வர வேண்டும் என்ற அக்கறை கொண்டுள்ள அவரால் நிச்சயம் முடியும்.

ஹில்லாரியே பாராட்டிட்டாரே...!
இவரின் புகழ் இந்தியா மட்டுமல்லாது உலக புகழ் பெற்றதால் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இவரை சந்தித்து அவரின் நிர்வாக திறமையை பாராட்டியும், தீவிரவாதத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்ததற்காகவும் இவரது ஆட்சி நிர்வாகத்தைப் பற்றி பாராட்டி சென்றார். தமிழ்நாட்டில் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ளது.

சீக்கிரமே 'ஸ்திரி ராஜ்' வரும்..!
அதே போல் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது ராஜபட்சேவுக்கு எதிராக முதன் முதலாக கண்டன குரல் கொடுத்தார். ஆக மொத்தத்தில் இந்துக்களால் சொல்லப்படும் (ஸ்திரி ராஜ்) பெண்கள் ஆட்சி என்பது வெகு விரைவில் இந்தியாவில் அமையப் போகிறது என்று அந்தப் பத்திரிக்கை பாராட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications