2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி திடீர் மரணம்!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான சுரேஷ்குமார் பல்சானியா (44) திடீர் மரணமடைந்தார். ரத்தம் தொடர்பான வியாதி காரணமாக அவர் இறந்துள்ளார்.
மிகவும் திறமையான அதிகாரி என்று பெயர் பெற்ற இவர் ஆரம்பம் முதலே இந்த வழக்கை விசாரித்து வந்தவர் ஆவார். முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவரும் இவரே.
இந்த வழக்குத் தொடர்பாக சமீபத்தில் மலேசியாவுக்கு சென்று வந்தார்.
வழக்கை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த இவர் வழக்கறிஞர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தெற்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்தார்.
சுரேஷ்குமார் பல்சானியா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 1996ம் ஆண்டு ஒடிஸ்ஸா மாநில ஐ.பி.எஸ். கேடர் அதிகாரியாவார். 2006ம்ம் ஆண்டு முதல் சி.பி.ஐயில் பணியாற்றி வந்தார்.
என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர் ஆவார். சி.பி.ஐயில் டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வந்த இவரின் சிறந்த சேவையை பாராட்டி கடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதியின் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் விவகாரத்தில் லண்டனுக்குச் சென்று விசாரணை நடத்திய இரு நபர் குழுவில் பல்சானியாவும் இடம் பெற்றிருந்தார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த அதிகாரியின் திடீர் மரணம் சிபிஐ வட்டாரத்தில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள ரோம் சென்றுள்ள சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பல்சானியாவின் மரண செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததுடன், நொறுங்கிப் போனோம். சி.பி.ஐயில் உள்ள மிகச் சிறந்த அதிகாரிகளில் பல்சானியாவும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications