கப்பலை இழுக்கும் கயிறு அறுந்தது...தரை தட்டிய பிரதீபா காவிரியை இழுக்கும் முயற்சியில் சிக்கல்

அக்டோப்ர 31ம் தேதி நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது புயலில் சிக்கி பெசன்ட் நகர் கடல் பகுதியில் தரை தட்டி நின்று விட்டது பிரதீபா காவிரி என்ற கப்பல். அதில் இருந்த 6 மாலுமிகள் உயிர் தப்ப கடலில் குதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 31 பேர் பத்திரமாக மீ்ட்கப்பட்டனர்.
360 டன் கச்சா எண்ணையுடன் உள்ள அந்தக் கப்பலை தற்போது மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. காக்கிநாடா, மும்பையில் இருந்து மாளவிகா, ரத்னா என்ற 2 இழுவை கப்பல்கள் சென்னை கொண்டு வரப்பட்டு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று சோதனை முறையில் பிரதீபா கப்பலை பைலட் கப்பல் மூலம் இழுக்கும் பணி நடந்தது. பிரதீபா கப்பலின் நங்கூரம் பகுதியில் ராட்சத கயிறு கட்டி அதை ஒரு கி.மீ. தொலைவில் இருந்து பைலட் கப்பல் இழுத்தது. ஆனால் கப்பலை அசைக்க கூட முடியவில்லை. எனவே பிரதீபா கப்பல் கடலுக்கு அடியில் ஆழமாக புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து இழுவை கப்பல்கள் மூலம் பிரதீபா கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது. முதலில் மாளவிகா கப்பல் மூலம் இழுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாளவிகா கப்பல் 2 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து பெரிய பருமன் கொண்ட ராட்சத கயிறு மூலம் பிரதீபா கப்பலை சுற்றி கட்டப்பட்டது. முன்னெச்சரிக்கையாக கடலில் 2 கி.மீ. தூரத்துக்கு மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த பணியை வேடிக்கை பார்க்க கடற்கரையில் மக்கள் திரண்டனர். அவர்களையும் போலீசார் நெருங்க விடாமல் தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார்கள். கடலோர காவல்படை படகுகள் கடலில் ரோந்து சுற்றி கண்காணித்தப்படி இருந்த நிலையில் கப்பலை இழுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கப்பலை இழுக்க முடியவில்லை.
இதையடுத்து 2 இழுவை கப்பல்கள் மூலம் ஒரே நேரத்தில் பிரதீபா கப்பலை இழுக்க முடிவு செய்யப்படடது. இதற்காக துறைமுகத்தில் நின்றிருந்த ரத்னா கப்பல் வரவழைக்கப்பட்டது.
இன்று பிற்பகலுக்கு மேல் ராட்சத கயிறு கட்டி இழுத்தபோது திடீரென கயிறு அறுந்து போனது. இதனால் கப்பலை இழுக்கும் முயற்சிகள் தற்காலிகமாக நின்றுள்ளது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications